Tuesday, March 15, 2011

இசுலாமியர்களை ஏமாற்றுகிறார கருணாநிதி?

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, காங்கிரசுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கி ஒரு வழியாக ராஜினாமா நாடகத்தை முடிவுக்கு வந்திருக்கிறது தி.மு.க. ஏற்கனவே தி.மு.க கூட்டணியில் பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று, தலா 31, 10, 7, 3 மற்றும் 1 என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், பா.ம.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிக்கு ஒதுக்கிய தொகுதிகளிலிருந்து தலா ஒன்றை பிடுங்கி காங்கிரசுக்கு அளித்திருப்பதன் மூலம் கூட்டணியில் நீடித்த குழப்பத்திற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தி.மு.க.

தி.மு.க உடனான கூட்டணி உடன்பாட்டிற்கு முன்னர் இரு கழகங்களின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி இரண்டு பக்கத்திற்கும் பா.ம.க தூது விட்ட நிலையில், தி.மு.க முந்தியடித்துக் கொண்டு 31 சீட்டுக்களை ஒதுக்கிய இன்ப அதிர்ச்சியில் இன்றளவும் திளைத்திருக்கும் பா.ம.க-விற்கு, ஒரு இடம் பிடுங்கப்பட்டது அதிர்ச்சியை அளிக்காது என்றே தோன்றுகிறது. மாநிலங்களவையில் தனது அன்பு மகனான அன்புமணிக்கு ஒரு இடத்தை உறுதி செய்யும் வரை தி.மு.க உடனான மோதல் போக்கை பா.ம.க மறந்தும் கடைபிடிக்காது என்பது காரணமாகவும், நிதர்சனமான உண்மையாகவும் இருக்கும் அதே சமயத்தில், எட்டு தொகுதிகள் வரை கேட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு, மொத்தம் மூன்று தொகுதிகளே ஒதுக்கப்பட்ட நிலையில், அதிலும் ஒன்றைப் பிடுங்கி காங்கிரசுக்கு கொடுத்திருப்பது, இஸ்லாமிய மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. மதமாற்ற தடைச் சட்டம் உள்ளிட்டவைகளால் சிறுபான்மை மக்களின் எதிரியாக பார்க்கப்பட்ட ஜெயலலிதாவே, தனது தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், சிறுபான்மை காவலராக தன்னை கூறிக் கொள்ளும் கருணாநிதியின் இந்த செயலை இஸ்லாமிய சமுதாய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான் மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

தேய்கிறதா தி.மு.க-வின் வெற்றி வாய்ப்புகள்?

தேர்தல் 2011 எப்போதும் இல்லாத அளவிற்கு அதிர்வலைகளை தமிழக அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதே நிஜம். திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க-விற்கு மட்டுமல்லாது, விஜயகாந்தின் தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கும் வாழ்வா, சாவா நிலையை இத்தேர்தல் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பொருட்டு அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுகளும், கூட்டணிக்காக போராடும் கட்சிகளின் நிலையும் பரிதாபத்திற்கு உரியதாக மாறியிருக்கின்றன. "தன்மான உணர்வை கேவலப்படுத்துபவர்க்ளோடு கூட்டணியை தொடர இயலாது" என்று தி.மு.க-வின் உயர்நிலை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் போட்டு, கூட்டணியில் இருந்து பா.ம.க-வை வெளியேற்றிய தி.மு.க, தற்போது தானே வலிய வந்து கூட்டணியில் இணைத்திருக்கிறது. "பெரியண்ணன் கருணாநிதி, எங்களை அழிக்க நினைத்தார். ஆனால் சகோதரி ஜெயலலிதா அன்பு காட்டி ஆதரிக்க நினைத்தார். இது தான் மாற்றத்திற்கு காரணம்" என்று 2001ம் ஆண்டு தேர்தலின் போதும், "தி.மு.க கூட்டணியை விட்டு காங்கிரசு வெளியே வந்தால், அவர்கள் தலைமையில் அணி திரளத் தயார்" என்று சில நாட்களுக்கு முன்பு வரை கூறிய ராமதாசும், தி.மு.க தனக்கு ஒதுக்கிய 31 சீட்டுக்களை (தற்போது 30-ஆக குறைக்கப்பட்டுள்ளது) மகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்.


இது தி.மு.க கூட்டணியில் காமெடிகள் என்றால், அ.தி.மு.க கூட்டணியில் காமெடிகள் இதை விட அதிகமாகவே இருக்கிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரசு இருப்பதாலேயே, அ.தி.மு.க ஆதரவுக் கொள்கையை கடைபிடிக்கும் இரண்டு கம்யூனிஸ்டுகளோடு, "ஜெயலலிதாவின் அரசியல் பார்வை, அடிப்படையிலே தவறானது" என்று முன்பு ஒரு முறை குற்றம் சாட்டிய வை.கோ.வும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே தங்களது இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க கூட்டணியில் புதுவரவாக விஜயகாந்தின் தே.மு.தி.க இடம் பெற்றிருப்பது தான் காமெடியின் உச்ச கட்டமாக இருக்கிறது. அநாகரிகத்தின் அடி வரை சென்று "குடிகாரர்" என்று ஜெயலலிதாவும், "ஊத்தி கொடுத்தாரா" என்று விஜயகாந்தும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை பரிமாறிக் கொண்ட நிலையில் தான், இந்தத் தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் வாழ்வா, சாவா என்ற நிலையில் இருவரும் இணைத்திருக்கின்றனர்.

தேர்தலை மனதில் கொண்டு தன்னை தொடர்ந்து தமிழர் தலைவராக காட்டிக் கொள்ளும் பொருட்டும், தென்னகத்து பிரபாகரனாக தன்னை மாற்றிக் கொள்ளும் பொருட்டும், திருமாவளவன் கடந்த டிசம்பரில் நடத்திய தமிழர் இறையாண்மை மாநாட்டில் தாங்கள் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கின்ற போதும் தங்கள் கட்சித் தொண்டர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கைகளுக்கு தி.மு.க செவி சாய்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், தி.மு.க கூட்டணியில் திருமாவளவன் இணைந்திருப்பது ஏன் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. மேலும், 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதே தி.மு.க கூட்டணியில் 8 தொகுதிகளை பெற்று போட்டியிட்ட நிலையிலும், அதைத் தொடர்ந்த பத்தாண்டுகளில் விடுதலைச் சிறுத்தைகள் நன்கு வளர்ந்திருக்கும் நிலையிலும், தி.மு.க-விடத்தில் வெறும் பத்து தொகுதிகளை மட்டுமே பெற்றிருப்பதன் மூலம், தி.மு.க-விற்கு திருமாவளவன் அடிபணிந்திருக்கிறார் என்றும், சிறுத்தைகளை அவர்களிடத்தில் அடமானம் வைத்திருக்கிறார் என்றுமே கருதத் தோன்றுகிறது. இது ஒரு புறமிருக்க, வடமாவட்டங்களில் பா.ம.க-வுடனான உறவில் சிறுத்தைகள் இணக்கமாக இல்லாத நிலையில், இரு கட்சித் தொண்டர்களும் தேர்தல் களத்தில் எப்படி இணைந்து பணியாற்றுவார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. எந்தக் "காங்கிரசை வேரரறுப்பது விடுதலைச் சிறுத்தைகளின் லட்சியம்" என்று சில காலம் முன்பு திருமாவளவன் முழங்கினாரோ, அதே காங்கிரசோடு இணைந்து இவரால் எப்படி செயல்பட முடியும் என்ற கேள்விக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வடமாவங்களில் பா.ம.க-வும், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளும் சமமாக உள்ள நிலையில், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள பெரும்பான்மையான தொகுதிகள் வடமாவட்டங்களிலே உள்ளதால், இரண்டிற்கும் ஒதுக்கப்பட்ட மொத்தம் 40 தொகுதிகளில் பெரும்பான்மையானவை வடமாவட்டங்களைச் சேர்ந்ததாக இருக்கும். இதன் மூலம் தி.மு.க வடமாவட்டங்களில் வலிமையானதாக காணப்பட்டாலும், குறைந்த அளவிலே போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால், வடமாவட்டங்களில் தி.மு.க-விற்கு சட்டசபையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. மேலும் விஜயகாந்தின் தே.மு.தி.க, அ.தி.மு.க கூட்டணியில் உள்ளதாலும், தே.மு.தி.க-விற்கு வடமாவட்டங்களில் குறிப்பிட்ட சகவிகித வாக்குகளை பெற்றிருப்பதாலும், அ.தி.மு.க-விற்கு அதிக அளவிலான அச்சுறுத்தலும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொங்கு மண்டலம் - நினைத்தாலே தி.மு.க-வின் வயிற்றில் புளியைக் கரைக்கும் பகுதி. அது அ.தி.மு.க-வின் கோட்டை என்பது தான் கருணாநிதியின் கவலைக்குக் காரணம். அதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலும் நிரூபித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏற்படும் இழப்பை, தி.மு.க இம்முறையும் சகித்துக் கொள்ள தயாராக இல்லை என்பதைத் தான் செம்மொழி மாநாடும், உள் ஒதுக்கீடும் காட்டியிருக்கிறது. விளைவு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கி அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு என கொங்கு மண்டலத்தை திருப்திப் படுத்தும் பல நிகழ்வுகளை அப்பகுதியில் தி.மு.க அரங்கேற்றியிருக்கிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் மூலம் ஏறத்தாழ 400 கோடி ரூபாய் அளவிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையாக வாழும் அருந்ததிய மக்களின் வாக்குகளை வசீகரிக்கும் விதமாக அவர்களுக்கு உள் ஒதுக்கீடும் அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆரம்பித்தாலும், தேர்தல் முடிவுகளின் மூலம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கொங்கு நாடு முன்னேற்றக் கழகமும் தி.மு.க கூட்டணியில் சேர்க்கப்பட்டு 7 தொகுதிகளும் அதற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரு புறம் தி.மு.க-விற்கு பலம் என்றாலும், கள் இறக்கும் கோரிக்கைக்கு கருணாநிதி தொடர்ந்து மெளனம் காப்பதும், சாயப்பட்டறை விவகாரம், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்குள்ளேயே பிளவுகள் போன்றவை கருணாநிதியின் நம்பிக்கையை வீண் போகச் செய்யலாம். மேலும், "கருணாநிதி-யின் ஸ்பெக்ட்ரம் பணத்தை பெஸ்ட் ராமசாமி 100 கோடியும், ஈஸ்வரன் 100 கோடியும், பெற்றுக் கொண்டு ஈஸ்வரனுடைய சம்பந்திக்கு சாராய தொழிற்சாலை லைசன்ஸ், பெஸ்ட் ராமசாமிக்கு சர்க்கரை ஆலை லைசென்ஸ் பெற்றுக் கொண்டும் கவுண்டர் இனத்தை கருணாநிதியிடம் அடமானம் வைத்ததை கண்டிக்கிறோம். இவண்: கொங்கு இன மக்கள்" என பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது.

தென் மாவட்டங்களும் தி.மு.க-விற்கு தலைவலியை கொடுக்கலாம். தேவேந்திர குல வேளாளர்கள், நாடார் மற்றும் முக்குலத்தோர் பெரும்பான்மையாக வசிக்கும் தென்மாவட்டங்களில், தி.மு.க பெரும்பாலும் அதிருப்தியையே சம்பாதித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. தேவேந்திர குல வேளாளர்கள் பெரும்பான்மையாக தி.மு.க-விற்கு வாக்களித்ததால் தான் கடந்த தேர்தலின் போது கருணாநிதியால் ஆட்சிக்கு வரமுடிந்தது என்று "த ஹிந்து" உள்ளிட்ட நாளேடுகள் கருத்துக்களை பதிவு செய்துள்ள நிலையில், இது மீண்டும் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். உமாசங்கர் பணியிடை நீக்கம், தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கழக உதவி தர ஆய்வாளர் முருகன் மர்மமான மர்மம், சுரேசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டது என தி.மு.க-விற்கு எதிராக திரும்பும் வகையில் தேவேந்திர விரோதப் போக்கு கடைபிடிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் நிலையிலும், தேவேந்திர வாக்குகளை பங்கு போட பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தயாராக இருக்கும் நிலையிலும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து விட்ட நிலையிலும் தேவேந்திர ஓட்டுக்கள் தி.மு.க-விற்கு எதிராக திரும்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மாவட்டங்களில் பெரும்பான்மையான வசிக்கும் மற்றொரு மக்களான நாடார்களின் ஓட்டுகள் ஒவ்வொரு முறையும் கடந்த தேர்தல் வரை தி.மு.க-விற்கே பெரும்பாலும் விழுந்திருக்கிறது. ராஜாத்தி, கனிமொழி மற்றும் பூங்கோதை ஆகியோரை காட்டி ஒவ்வொரு தேர்தலிலும் நாடார் இன மக்களின் வாக்குகளை வாங்கி வந்த தி.மு.க-விற்கு இம்முறை அது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. மத்திய அமைச்சரவை உள்ளிட்ட பிற துறைகளில் நாடார்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனும் அதிருப்தி, இச்சமுதாய மக்களிடம் பரவலாக காணப்படும் நிலையில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் அ.தி.மு.க கூட்டணியில் சாய்வதையே விரும்புகிறது. நாடார் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவருரான கரிக்கோல்ராஜ் மட்டுமே கருணாநிதியுடனான கூட்டணி உறவில் விருப்பம் காட்டுவதாக அறியப்படுகிறார். மேலும், எந்த அணியுடன் கூட்டணி அமைப்பது (அல்லது வாக்களிப்பது) என்பதை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து நாடாரின அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பின் முடிவிற்கு விடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ம.தி.மு.க மற்றும் கம்யூனிஸ்டுகள் உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில், அ.தி.மு.க நாடார் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக தெரிகிறது. தேவேந்திர மக்களோடு, நாடாரின மக்களும் தென்மாவட்டங்களில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்ற நிலையில், அ.தி.மு.க அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அவர்களுக்கு கொடுத்து தங்கள் கூட்டணியில் வைத்துக் கொள்ளவே விரும்பும் என்றும் தோன்றுகிறது.

"நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும், என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்" என்று எப்போது ஜெயலலிதா சொன்னாரோ, அப்போதிலிருந்து முக்குலத்தோர் ஓட்டுக்கள் அ.தி.மு.க பக்கம் சாய்ந்து விட்டது என்பதே உண்மை. அ.தி.மு.க-வின் கழகப் பொருளாளர் பொறுப்பு முதல் மாநில மாணவரணி செயலாளர் பொறுப்பு என பெரும்பாலான முக்கியப் பொறுப்புகள் முக்குலத்தோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், முக்குலத்தோரான சசிகலாவும் ஜெயலலிதாவுடன் இருப்பது அ.தி.மு.க-விற்கு அதிக தெம்பைக் கொடுக்கும். தி.மு.க-விலும் சபாநாயகர் ஆவுடையப்பனில் தொடங்கி ஐந்து அமைச்சர்கள் முக்குலத்தோருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் என்று வரும் போது, முக்குலத்தோரில் பெரும்பான்மையோர் அ.தி.மு.க பக்கமே திரும்புவார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருப்பதால், இங்கும் தி.மு.க-விற்கு சற்று சிரமம் தான்.

கடைசியாக காங்கிரஸ் விவகாரத்திற்கு வருவோம். அரசியல் சதுரங்கத்தில் தாங்களும் அருமையாக காய் நகர்த்த முடியும் என்பதை, தி.மு.க கூட்டணியில் 63 தொகுதிகளை வாங்கியிருப்பதன் மூலம் காங்கிரஸ் காட்டியிருப்பதாகவே தோன்றுகிறது. 90 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம் எனக் கூட்டணி உறுதி செய்யப்படும் முன்னரே தி.மு.க-விற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்த காங்கிரஸ், தி.மு.க-வின் ராஜினாமா நாடகத்திற்கு பின்னர், தற்போது ஒரு வழியாக 63 தொகுதிகளுக்கு இறங்கி வந்திருக்கிறது. ஆனாலும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளும், அ.தி.மு.க கூட்டணிக்கு சாதமாக மாறுவதற்கே வாய்ப்பிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரசுக்கு எதிரான "நாம் தமிழர்" சீமானின் பிரச்சாரம் காங்கிரசை கவிழ்த்து விட்ட நிலையில், அது அ.தி.மு.க-விற்கு சாதகமாக அமைந்தது. இந்தத் தேர்தலின் போதும் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படும் என்று சீமான் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், காங்கிரசின் 63 தொகுதிகளிலும் அ.தி.மு.க சற்று தெம்பாகவே தெரிகிறது. மேலும், தி.மு.க தொண்டர்களுடான உறவில் தொய்வு ஏற்பட்டுள்ளதும், தி.மு.க-வே காங்கிரசசை தோற்கடிக்கும் வண்ணம் சில உள்ளடி வேலைகள் பார்க்கும் என்று நம்பப்படுவதாலும், அதுவும் அ.தி.மு.க-விற்கு சாதகமாக திரும்பும் என்றே சொல்லப்படுகிறது.

உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்ற கதையாக தி.மு.க தற்போது தேர்தல் களத்தில் உள்ளது. கருணாநிதியின் சாணக்கியத்தனத்தோடு, அழகிரியின் அதிரடியும், ஸ்டாலினின் தொய்வில்லாத பிராச்சாரமும் இதுவரை தி.மு.க-விற்கு வெற்றியைத் தேடித் தந்த நிலையில், இவையெல்லாம் இம்முறையும் சாத்தியப்படுமா என்பது மே 13 தெரிந்து விடும். அதுவரை பொறுத்திருப்போம்.